எம்.நயினார் முகம்மது, வீரசோழனிலிருந்து எழுதுகிறார்: "இந்தியாவின் அனைத்து மாநிலத்திலும் இந்தி பாடம் அமல்படுத்த வேண்டும்' என்ற மத்திய அமைச்சர் கபில் சிபல் அறிவிப்பு, வரவேற்கத்தக்க விஷயம். உடனே தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, "மூன்றாவது பாடமாக இந்தி மொழியை அனுமதிக்க முடியாது' என்று பேட்டி அளித்திருப்பது கண்டனத்துக்குரியது. காரணம், உலக அள வில் இந்தி மொழி வாழ்வாதாரமாக இன்று திகழ்கிறது என்றால் ஐயம் இல்லை. லண்டனில், பாகிஸ் தானை சேர்ந்த ஒரு நண்பர் என்னுடன் வேலை செய்தார். அவர் என் நண்பரை பார்த்து கேட்டார். "நீங்கள் இந்தியன் என்கிறீர்கள். ஆனால், இந்தி தெரியாது என்கிறீர்களே... இது மிகவும் வினோதமாக இருக்கிறது' என்றார். நிச்சயமாக அவருக்கு அது வினோதம் தான். காரணம், தமிழகம் என்ற மாநிலம் உண்டு. அங்கு இருக்கும் ஒரு பிரதான அரசியல் கட்சி காலம் காலமாக இந்தியை எதிர்க்கிறது என்பது அவர் அறியாத விஷயம். தி.மு.க., அரசு, இந்தியை எதிர்த்து என்ன சாதிக்க போகிறது என்று தெரியவில்லை. தங்கம் தென்னரசு படித்தவர், கல்வி அமைச்சராக வேறு இருக்கிறார். இவர் தனது அறிவுக்கு திரையிட்டு, முதல்வரை மகிழ்விக்கும் வகையில் பேசியது வேதனைக்குரியது. தி.மு.க., அரசு தனது வறட்டு பிடிவாதத்தை ஓரம்கட்டி, இந்தி எதிர்ப்பை கைவிட வேண்டும். தமிழர்கள், தமிழகம் தாண்டி பிழைக்க, இந்த அரசு அடித்தளம் அமைக்க வேண்டும் என்பது ஏராளமான தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை.