என்னை தொட்டவர்கள் !

15 ஜூன், 2012

கள்ளக்காதலுக்காக கணவர் கொலை : பெண்ணுடன் நான்கு பேர் கைது


நரிக்குடி : விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி,மற்றும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நரிக்குடி வீரசோழனை சேர்ந்தவர் அக்பர் அலி ராஜா,32. மாற்றுத் திறனாளியான இவர் அங்கு டெலிபோன் பூத் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு, மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். வீரசோழன் போலீசார் விசாரித்தனர். இதில்,"" அக்பர் அலி ராஜா மீது அவரது மனைவி பீமா பானு,21,க்கு திருமணம் நாள் முதலே வெறுப்பு இருந்துள்ளது. இந்நிலையில், வீரசோழனை சேர்ந்த அப்துல் ரகுமானுக்கும்( சென்னையில் டிரைவராக உள்ளார்) பீமா பானுவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கடந்த இரு வாரத்திற்கு முன் பீமாபானுவை அப்துல்ரகுமான், சென்னைக்கு அழைத்துள்ளார். அதன்படி சென்ற இவரை, உறவினர்கள் தடுத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து இடையூறாக உள்ள கணவரை கொலை செய்ய கள்ளக்காதலனுடன் சேர்ந்து பீமா பானு திட்டம் தீட்டினர். இதற்காக அப்துல் ரகுமான் கடந்த ஜூன் 11 ல் வீரசோழன் வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் முன் இரவு 12 மணிக்கு , நண்பர்களான வீரசோழனைச் சேர்ந்த ஏ.தமீம் அன்சாரி ,21, கே.தமீம் அன்சாரி, 20, ஆகியோருடன் அக்பர் அலி ராஜா வீட்டிற்கு வந்த அப்துல்ரகுமான், தூங்கிக் கொண்டிருந்த அவரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து, அவராக தூக்கில் தொங்கியது போல் செய்தனர். இதற்கு பீமா பானுவும் உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்தது. அதன்படி, நரிக்குடி இன்ஸ்பெக்டர் சண்முகம், தனிப்படை எஸ்.ஐ., அன்புராஜ் மற்றும் போலீசார் , பீமா பானு , கள்ளகாதலன் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.

1 ஜூன், 2012

தொப்பி, ஸ்கார்ப், டர்பன் அணிய முஸ்லீம், சீக்கியர்களுக்கு நியூயார்க் அனுமதி


நியூ யார்க் : நியூயார்க்கில் உள்ள அனைத்து போக்குவரத்து அமைப்புகளிலும் பணியாற்றும் முஸ்லீம், சீக்கியர்களுக்கு தொப்பி, தலைப்பாகை அணிவதில் விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து நியூயார்க் மாகாணத்தில் பேருந்து, ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் தலையில் தொப்பி, தலைப்பாகை, டர்பன், ஸ்கார்ப், ஹிஜாப் உள்ளிட்டவை அணியும் போது அதில் போக்குவரத்து அலுவலகத்தின் சின்னம் பொறிக்கப்பட்டதை தான் அணிய வேண்டும் என்று கட்டுபாடு விதிக்கப்பட்டது.
மார்ச் 2002ல் அமுல்படுத்தப்பட்ட உத்தரவுக்கு சீக்கியர்களும் முஸ்லீம்களும் தங்களை தனிமைப்படுத்துவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சட்டத்தை வாபஸ் பெற மெட்ரோ போக்குவரத்து அமைப்பு மறுத்தது. 2004ல் இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் எதிரொலியாக 8 ஆண்டுகள் கழித்து முஸ்லீம்களும் சீக்கியர்களும் எவ்வித கட்டுபாடுகளும் இன்றி தலைப்பாகை, தொப்பி, ஸ்கார்ப் உள்ளிட்டவற்றை அணியலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த சீக்கிய கூட்டமைப்பின் தலைவர் அமர்தீப் சிங் இது வரை தங்கள் நம்பிக்கை அல்லது வேலை இரண்டில் ஒன்றை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நிலையிலிருந்து சிறுபான்மையினரை காப்பாற்றிய தீர்ப்பை வரவேற்பதாகவும் இரட்டை கோபுர தாக்குதலுக்காக பழிவாங்கபட்ட அப்பாவி சீக்கிய மற்றும் முஸ்லீம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்ததற்காகவும் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.