என்னை தொட்டவர்கள் !

13 ஜூன், 2010

கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்

அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.

அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும்.

உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன.

'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம்.

கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.

நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)

முதல் ஆலயம்

மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும்.

அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)

'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366

ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.

ஹாஜரா, கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் (அலை) மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது.

எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125)

அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127)

மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை:

1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்),

நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.

''நபி (ஸல்) அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) திர்மிதீ 3860

மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது.

அபய பூமி

மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:

அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57)

அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97)

இப்ராஹீம் (அலை) அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான்.

நபி (ஸல்) கூறினார்கள், ''இப்ராஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) புகாரி.

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126)

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.

திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

அல்லாஹ்வுடைய பாதுகாப்பு

'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும்.

அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான்.

இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

''(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5)

மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2118

இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது.

கொலை, போர் செய்தல் கூடாது

நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில:

அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது.

''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 4313, 1834

புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான்.

(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)

நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 6882

காஃபிர்கள் நுழைவதற்குத் தடை

இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.

ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28)

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள். அபூஹுரைரா (ரலி) புகாரி 1622

பல கடவுட் கொள்கை கொண்டவர்களைத் தடை செய்வது மனித நேயத்திற்கு எதிரானது என்று கருதக் கூடாது.

ஏனெனில் கஃபாவை அபய பூமியாக இறைவன் அமைத்துள்ளான். அந்த ஆலயத்திற்கும், அதன் வளாகத்திற்கும் தனிச் சட்டங்கள் உள்ளதைப் பார்த்தோம். அங்கே பகை தீர்க்கக் கூடாது; புல் பூண்டுகளைக் கூட கிள்ளக் கூடாது என்பன போன்ற விதிகள் உள்ளன.

இந்தச் சிறப்பான விதிகளை இஸ்லாத்தை ஏற்றவர்களால் தான் கடைப்பிடிக்க இயலும். உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான் இவ்வாறு மற்றவர்களுக்கு அங்கே தடை விதிக்கப்படுகிறது.

ஆனால் மற்ற பள்ளிவாயில்களில் அவர்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.

புனிதப் பயணம் மேற்கொள்ளுமிடம்

இஸ்லாத்தில் மூன்று இடங்களைத் தவிர வேறு எங்கும் புண்ணியத்தை நாடி பயணம் செய்வது கூடாது. அவ்வாறு செய்வது பாவமான காரியமாகும்.

புண்ணியத்தை நாடி பயணம் செய்யும் மூன்று இடங்களில் முதலாவது இடமாக நபி (ஸல்) அவர்கள் கஃபதுல்லாஹ்வைக் கூறியுள்ளார்கள்.

''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீதுல் குத்ரீ (ரலி) புகாரி 1189

மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ''கஃபா'' ஆலயம் சென்று ''ஹஜ்'' செய்வது கட்டாயக் கடமையாகும்.

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)

அளவற்ற நன்மை

'கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.

என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) அபூஹுரைரா (ரலி) புகாரி 1190

''மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். ஜாபிர் (ரலி) இப்னுமாஜா 1396, அஹ்மத் 14167

எந்நேரமும் வழிபடலாம்

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.

ஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.

நபி (ஸல்) அவர்கள், அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்.
ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) திர்மிதீ 795

தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு

இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.

''மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி 1881, முஸ்லிம் 5236

கஅபா இடிக்கப்படுதல்

கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும். அபூஸயீத் (ரலி) புகாரி 1593.

கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வரும் போது சிலர் அதனை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

இதைப் பற்றி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள், அபீஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் கூறினார்கள். புகாரி 1591, 1896

''வெளிப்பக்கமாக வளைந்த கால்களை உடைய, கருப்பு நிறத்தவர்கள், ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 1595.

கியாமத் நாள் வரும் வரை தான் அல்லாஹ் கஅபாவை அபய பூமியாகவும், பாதுகாப்புத் தலமாகவும் ஆக்கியுள்ளான். எனவே கியாமத் நாள் வரும் போது ''கஅபா'' இடிக்கப்படுவது இறைவனுடைய பாதுகாப்புக்கு எதிரானது கிடையாது.

நல்லுணர்வு பெறுவோம்

இப்னு உமர் (ரலி), நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது ''இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், ''அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். உடனே அவர்கள், ''இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்க மக்கள் ''அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!'' என்றனர். அவர்கள் (இது) ''புனிதமிக்க நகரமாகும்!'' என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், ''இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?'' என்றதும் மக்கள், ''அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்'' என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இது புனிதமிக்க மாதமாகும்'' எனக் கூறிவிட்டு, ''உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!'' எனக் கூறினார்கள்.புகாரி 1742

இப்படிப்பட்ட புனிதங்களை உணர்ந்து அதன் மூலம் படிப்பினை பெற்று வாழக்கூடிய மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக!

12 ஜூன், 2010

முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி, நபித்தோழர்களின் நேர்முக வர்ணனை

ஒருவரை சமூக தலைவராக, ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்கள் அவரது கொள்கை கோட்பாடுகள் மற்றும் அங்க அசைவுகளை முழுமையாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியாது.

ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொண்ட சமூகம் அவரது போதனைகள் கொள்கைள் மட்டுமல்லாமல் அவரது குணநலன்கள அங்க அவையங்கள், நெளிவு சுளிவுகள், பேச்சு மூச்சுக்கள் என்று பலவற்றையும் கூர்மையாக கவனித்து துள்ளியமாக அடுத்த தலைமுறைக்கு அறிவித்தது. உலக வரலாற்றில் இது போன்று எந்த ஒரு தலைவரின் வாழ்க்கை குறிப்பும் பதிவு செய்யப்பட்டிருக்காது.
நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் இரண்டரக்கலந்து சமூக வாழ்விலும் பொது வாழ்விலும் பங்கேற்று வாழ்ந்தவரகள். தனிமையை விட்டும் ஒதுங்கியவர்கள். அவரது வாழ்வு ஒரு திறந்த புத்தகமாகவே இருந்தது. ஒளிவு மறைவில்லாத அவரது வாழ்க்கையின் நிலையை பற்றி அவரது தோழர்களே விபரிக்கிறார்கள்.

இதோ நபித்தோழர்கள் நேர்முக வர்ணனையை தருகிறார்கள்,

நபி (ஸல்) அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும் பிறரால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் அதிக நெட்டையானவர்களாகவோ அதிக குட்டையானவர்களாகவோ இல்லாமல் நடுத்தர உயரமானவர்களாகவும் அழகிய உடலமைப் பையுடையவர்களாகவும் சிகப்பு கலந்த வெண்மை நிறமுடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் முகம் பவுர்ணமி இரவின் சந்திரனைப்போல் பிரகாசிக்கும், மேனி ஒளி வீசிக்கொண்டிருக்கும்.

தலைமுடி முற்றிலும் சுருண்டவையாகவோ முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை. தலையில் தற்செயலாக வகிடு படிந்து விடுமாயின் அதை அப்படியே விட்டு விடுவார்கள். தலைமுடி தோள் புஜத்தை தொட்டுக் கொண்டிருக்கும். இரு புஜங்களுக்கும் இடைப்பட்ட தொலைவு அதிகமாகும். இரு புஜங்களுக்கு மத்தியில் நபித்துவ முத்திரை இருந்தது.

படர்ந்த நெற்றி, அடர்ந்த புருவம், இரு புருவங்களுக்கும் மத்தியில் ஒரு நரம்பு இருக்கும் கோபம் ஏற்படும் போது அது எம்பிக் கொள்ளும். முதன் முதலில் அவர்களை காண்போர் மூக்கு நீண்டதாக காண்பார். கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும்.

தாடி அடர்ந்திருக்கும் கன்னங்கள் மிருதுவாக இருக்கும் வாய் அகன்றதாகவும் பற்கள் இடைவெளி விட்டவையாகவும் இருக்கும். கழுத்து சுத்தமான வெள்ளியால் செதுக்கப்பட்ட உருவத்தைப் போல் அழகாயிருக்கும். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை முடியிருக்கும். அது கோடுகள் போன்று நீண்டதாயிருக்கும். நெஞ்சு (மார்பு) அகன்றிருக்கும். மார்பகத்திலும் வயிற்றிலும் முடியிருக்கும்.
வயிறும் நெஞ்சும் சமமானதாக இருக்கும். முழங்கைகள் தோள் புஜங்கள் நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் முடியிருக்கும்.

அவையவங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும் சதை பிடிப்புள்ளதாகவும் இருக்கும். இரு உள்ளங்கைகளின் மூட்டுக்களும் நீளமாக இருக்கும். உள்ளங்கை விரிந்திருக்கும். உள்ளங்கைகளும் பாதங்களும் சதை பிடிப்புள்ளதாக இருக்கும்.

கை, கால், விரல்கள் பொருத்தமான அளவிருக்கும். பாதங்கால் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் சமமாய் இருக்கும். அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை.

நடக்கும் போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள், பாதத்தைப் பலமாக எடுத்து, மெதுவாக வைப்பார்கள். அகலமாக அடி எடுத்து வேகமாக நடப்பார்கள். நடக்கும் போது மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் நடை இருக்கும்.

யாராவது அழைத்தால் திரும்பும்போது முகத்தை மட்டும் திரும்பாமல் முழுமையாகத் திரும்புவார்கள். அவர்களின் பார்வை கீழ்நோக்கியே (பூமியை பார்த்தே) இருக்கும். வானத்தைப் பார்ப்பதை விட பூமியைப் பார்ப்பதில் அவர்களது பார்வை அதிகமாக இருந்தது.

தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு பின்னால் வருவார்கள். சந்திப்பவர்களை ஸலாம் கூறி பேச ஆரம்பிப்பார்கள்.

வுளூச்செய்யும் போதும் தலைவாரும் போதும் செருப்பணியும் போதும் வலப்புறத்திலிருந்து ஆரம்பிப்பதை விரும்புவார்கள்.

அவர்களது தலைமுடியிலும் தாடியிலும் சில முடிகள் நரைத்திருந்தன. சுமார் இருபது முடிகளே நரைத்திருந்தன.

இஸ்மித் என்ற சுர்மாக்கூடு ஒன்று இருந்தது. ஒவ்வொரு இரவிலும் இரு கண்களிலும் மூன்று தடவைகள் சுர்மா இட்டுக் கொள்வார்கள்.

இஸ்மித் சுர்மா இடுங்கள் அது பார்வையைக் கூர்மையாக்கும் இமைகளின் முடியை வளரச்செய்யும் எனவும் கூறுவார்கள்.

போர்வையும், சட்டையும் அவர்களது ஆடைகள். சட்டையை அதிகமாக விரும்புவார்கள்
அவர்கள் அணியும் காலணி (செருப்பு)களுக்கு இரு வார்ப்பட்டைகள் இருந்தன. வெள்ளியிலான மோதிரம் செய்து வலது கரத்தில் அணிந்திருந்தார்கள். அதில் முஹம்மது என்று ஒரு வரியும், றஸூல் என்ற ஒரு வரியும், அல்லாஹ் என்ற ஒரு வரியும் செதுக்கப்பட்டிருந்தது. கடிதங்கள் எழுதும் போது இதனை முத்திரை யாக பயன்படுத்துவார்கள்.

பெரும்பாலான சிரிப்பு புன்னகையாக இருக்கும், பேசும் போது அடுத்தவர்கள் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளியிட்டு தெளிவாக பேசுவார்கள் அவசியமில்லாமல் பேசமாட்டார்கள். அன்போடு பேசுவார்கள் அடுத்தவர்களை வெருண்டோட செய்யமாட்டார்கள். அறையிலிருக்கும் கன்னியரை விட அதிகமாக வெட்கப்படுவார்கள்.

கடுகடுத்த முகத்துடன், அடுத்தவர்களை இழிவாக மதிக்கும் குணத்துடன் இருந்ததில்லை. தமக்கு கிடைக்கும் பொருள் அற்பமானதாக இருந்தாலும் பெரி தாக மதிப்பார்கள்.

அன்பளிப்புக்களை ஏற்றுக் கொள்வார்கள். நறுமனத்தை மறுக்கமாட்டார்கள். தர்மமாக வழங்கும் பொருட்களை தனக்கும் தனதுகுடும்பத்திற்கும் தடுத்து கொண்டார்கள். தமக்காக அடுத்தவர்களை பழிவாங்கியதில்லை. கோபப்பட்டதுமில்லை அல்லாஹ்வின் வரம்புகளை மீறும்போதே நடவடிக்கை எடுப்பார்கள. அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக இருப்பதற்கு இரவிலும் (தஹஜ்ஜுத்) நின்று வணங்குவார்கள்.

இஸ்லாத்திறகு முரண்படாத கவிதையை ரசித்தார்கள். இஸ்லாத்திறகு முரண்பட்டவர்கள் கவிதையால் சாடும் போது கவியால் பதிலடி கொடுப்பதற்காக ஒருவரை நியமித்தார்கள்.

தனக்கு ஐந்து பெயர்கள் இருப்பதாக குறிப்பிட்டாரக்ள். முஹம்மத் அஹ்மத் அல்மாஹி(என்னை கொண்டு அல்லாஹ் இறை நிராகரிப்பை அழிப்பான்), அல்ஹாஷிர்(என் பாதத்தின் கீழ்-மறுமையில்-மக்கள் எழுப்பப்படுவார்கள், அல்ஆகிப்(இறுதியானவன்-எனக்குப்பின் எந்த நபியும் இல்லை.

குர்ஆன் ஓதும் போது அழுவார்கள். அப்போது வயிற்றில் ஒரு சட்டி கொதிப்பது போன்று சப்தம் கேட்கும். உண்ண உணவில்லாமல் பல இரவுகள் குடும்பத்தோடு பட்டினியுடன் இருப்பார்கள். பெரும்பாலும் வாற்கோதுமையும் ரொட்டியும் உணவாக இருக்கும்.

வாற்கோதுமையை இடித்து பிறகு அதனை எடுத்து ஊதுவார்கள். அதிலுள்ள உமிகள் நீங்கிய பிறகு அதில் தண்ணீரை ஊற்றி குழைத்து குடும்பத்துடன் சாப்பிடுவார்கள் ஒரு நாளில் இரு தடவைகள் ரொட்டியும் இறைச்சியும் வயிறாற உண்டதில்லை. சாப்பிட்ட பின் விரல்களை சூப்புவார்கள்.

சாய்ந்து கொண்டு சாப்பிடுவதையும் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதையும் தடுத்தார்கள். உணவு இல்லாத சந்தர்ப்பத்தில் நோன்பு நோற்பார்கள்.

வீட்டுக்குள் நுழைந்தால் மனைவியுடன் வீட்டு வேளைகளில் ஈடுபடுவார்கள். தனது வேளைகளை தாங்களாகவே செய்து கொள்வார்கள். பாங்கு சொல்லி விட்டால் தொழுகைக்காக புறப்படுவார்கள்.

தூங்கும் போது வலது உள்ளங்கையை வலது கண்ணத்தின் கீழ் வைத்து இறைவனை துதித்து (துஆ ஓதி) விட்டு தூங்குவார்கள். பேரீத்த மரத்தின் நார்களால் நிரப்பப்பட்ட தோல்பை அவரது தலையணையாக இருந்தது. மிருதுவான படுக்கையை விரும்பியதில்லை.

தன்னை அல்லாஹ்வின அடிமை, அவனது தூதர் என்று போற்றுவதையே விரும்பினார்கள். தனது மரணத்திற்கு பின் தனக்கு சமாதி வழிபாடு செய்வதையும் எச்சரித்தார்கள்.

ஒட்டுப்போட்ட ஒரு போர்வையும், கடினமான ஒரு வேட்டியும் அணிந்திருந்த வேளையில் திங்கட்கிழமை மரணித்தார்கள். மூன்று வெள்ளை துணிகளால் கபன் செய்யப்பட்டார்கள். செவ்வாய் கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்படடார்கள்.

தனது குடும்பத்திற்காக சில போர் கருவிகள் ஒரு கோவேறு கழுதை தர்மம் செய்து விட்டு போன நிலம் இவற்றை தவிர வேறு எதையும் விட்டுச்செல்லவில்லை.

எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி

ஸஃபர் மாதமும் முஸ்லீம்களும்

சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால் மாதம்தோறும் ஏதாவதொரு புதுமையை வணக்கம் என்ற பெயரில் நிறைவேற்றி அதன் காரணமாக நன்மையை அடைந்து விடலாம் என்றெண்ணி செய்கின்றனர். உதாரணமாக முஹர்ரம் மாதம் பாஞ்சாவென்றும், ஸஃபர் மாதம் வந்தால் ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதனென்றும், ரபிஉல் அவ்வல் மாதம் வந்துவிட்டால் மீலாது விழா கொண்டாட்டமென்றும், ரஜப் மாதத்தில் பூரியான், பாயாசம் சகிதம் பாத்திஹாவென்றும், ஷாஃபான் மாதத்தில் ஷபே பராஅத் இவைகள் போன்ற பித்அத்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன.

ஆனால் இஸ்லாத்தில் ஒரு வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன. ஒன்று இக்லாஸ் என்னும் மனத்தூய்மையுடன் செய்தல் அவசியம் மற்றொன்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எடுத்து இயம்பிய வழிமுறையில் செய்தல் அவசியம் இவைகள் இரண்டையும் விடுத்து காலம்காலமாக செய்த செயல் என்றோ, முன்னோர்கள் செய்தவைகள் என்றோ, செய்வோமேயானால் நாளை மறுமையில் எந்த பயனும் கிடைக்காது மாறாக புதுமையை புகுத்திய குற்றத்திற்காக தண்டனையை பெற்று தரும் என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஆதாரமாக உள்ளது.

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், வார்த்தைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்), பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும், வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

மேற்கண்ட ஹதீஸில் குறிப்பிட்டது போன்று சிறந்த வார்த்தையாகிய குர்ஆனிலும் சிறந்த நடைமுறையாகிய நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளிலும் இல்லாத ஒன்றை யார் செய்தாலும், சொன்னாலும், அங்கிகரித்தாலும் அனைத்தும் வழிகேடுகளாகும், வழிகேடான வணக்கங்கள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்க போதுமானதாகும்.

இதுபோன்ற வழிகேடுகளில் ஒன்றுதான் ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று கருதி அந்த மாதத்தின் கடைசி புதன்கிழமை வரை எந்தவொரு நல்ல காரியங்களையும் செய்யாமல் பிற்படுத்துவதும் அல்லது தடுப்பதுமாகும். இந்த காலங்களில் இப்படி ஏதாவது சுபநிகழ்ச்சிகளை நடைபெற செய்தால் நன்மை கிடைக்காது என்று உறுதியாக நம்பி பிற்படுத்துகின்றனர். எவ்வாறு மாற்று மதத்தில் மார்கழி மாதத்தை பீடை மாதமென்று கருதி சுப நிகழ்ச்சிகளை செய்யாமல் பிற்படுத்தியோ அல்லது முற்படுத்தியோ செய்கின்றார்களோ அதேபோன்று தூய மார்க்கமாகிய இஸ்லாத்தில் இருப்பவர்களும் மாற்று மதத்தாரை காப்பி அடிப்பதை போன்று அடிபிறழாமல் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். எந்ததளவிற்கெனில் திருமணமான புதுமண தம்பதிகளையும் ஒன்றுசேரவிடாமல் பிரித்து வைத்து பீடை கழிக்கின்றனர் எவ்வாறு மாற்று மதத்தினர்கள் மார்கழி மாத்தில் செய்கின்றார்களோ அதே போன்று.

யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கின்றார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களே! (நூல் அபூ தாவூது).

இந்த ஹதீதின் சாராம்சம் என்னவெனில் சமுதாயத்தின் மற்றும் நாட்டின் எண்ணிக்கையில் பெயரளவு முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வும் அவனுடைய ரசூல்(ஸல்) அவர்களும் காட்டி தந்த அழகிய வழிமுறையினை பின்பற்றி வாழ்ந்து உயர்ந்த நிலையான சொர்க்கத்திற்கு தகுதியானவர்களாக வாழாமல், மார்க்கம் அனுமதித்திருக்கின்றதா, அல்லாஹ் அங்கிகரிப்பானா? மற்றும் முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதுமோ அல்லது ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது செய்தார்களா?, சொன்னார்களா? அல்லது அங்கீகாரம் வழங்கினார்களா? என்றெல்லாம் பார்க்காமல் முன்னோர்கள் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மற்றவர்களை பார்த்து பின்பற்றி வருகின்றார்களே அவர்கள் அந்த சமுதாயத்தையே சார்ந்தவராவார் என நபி(ஸல்) அவர்கள் தெள்ளத்தெளிவாக கூறிவிட்டார்கள்.

இன்னும் இந்த ஸபர் பீடையை கழிக்க அல்லது நீக்க இவர்களிடத்தில் நடைமுறையில் உள்ள செயல்கள் அனைத்தும் ஆச்சரியப்பட வைக்கின்றன. அதாவது ஸஃபர் மாதத்தின் கடைசி புதனன்று வீடுகளை சுத்தம் செய்து அந்தந்த பகுதியை சேர்ந்த ஜமாஅத் தலைவர்களின் உத்தரவின் மூலம் மா இலைகளில் மையினால் என்னவென்றே தெரியாத மற்றும் புரியாத ஒருசில அரபி எழுத்துக்களை எழுதி அதனை எல்லா வீடுகளுக்கும் வினியோகம் செய்து அந்த மா இலையில் எழுதப்பட்ட வார்த்தையை தண்ணீரில் கரைத்து எல்லோரும் குடித்துவிட்டு, பல்வேறு வகையான உணவு பண்டங்கள் மற்றும் பதார்த்தங்களை அன்றைய தினத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டு அல்லது பார்சல் எடுத்துக் கொண்டு ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து ஆற்றங்கரைக்கோ, கடற்கரைக்கோ, புல்வெளிகளுக்கோ சென்று குளித்துவிட்டு நேராக அவரவர்களின் விருப்பத்திற்கேற்ப சினிமா தியேட்டர்களுக்கோ அல்லது தர்ஹாக்களுக்கோ சென்று அருள்(?!) பெற்றுவிட்டால் ஸஃபர் மாத பீடை நீங்கும் என்ற எண்ணத்தில் இன்றும் அறியாமை கால பழக்கத்தில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த அனாச்சாரங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு இவர்கள் எடுத்து வைக்கும் காரணம் வினோதமானது அதாவது நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத ஆரம்பத்தில் நோய்வாய்பட்டு கடைசி புதனன்று நிவாரணம் பெற்றார்கள், நோய் ஏற்பட்ட நாட்களை பீடையென்றும் நிவாரணம் கிடைத்த நாளை பீடை போக்கிய நாளென்றும் கருதி இதுபோன்ற சடங்கு சம்பிரதாங்களை செய்து வருகின்றனர். இந்த காரணம் சரியென்றிருந்தால் அதனை அல்லாஹ் தன் திருமறையில் கூறியிருக்க வேண்டும் அல்லது அருமை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன் வாய் மொழிந்திருக்க வேண்டும், ஆனால் அதன்பிறகு நபி(ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிர் வாழ்ந்த அடுத்தடுத்த வருடங்களில் வரக்கூடிய ஸபர் மாதத்தை நான் நோயுற்று நிவாரணம் பெற்ற காரணத்திற்காக இவ்வாறு இவ்வாறாக செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கவுமில்லை. பூர்த்தி செய்யப்பட்ட மார்க்கத்தில் ஏதோ ஒருசிலர் தன்னுடைய வருமானத்திற்காக புதிதாக புகுத்தி உள்ளனர் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.

ஒரு மனிதருக்கு ஏதாவது ஒரு துன்பத்தை நீக்குவோனும் மேலும் நன்மையை கொடுப்போனும் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் கிடையாது என்பதை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்

இன்னும் (நபியே) அல்லாஹ் உமக்கு ஏதாவது (ஒரு) துன்பத்தைக் கொண்டு பீடிப்பானாகில் அதனை நீக்குவோர் அவனையன்றி வேறு ஒருவரும் இல்லை (அவ்வாறே) அவன் உனக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தித் தந்தால் (அதைத் தடுத்துவிடுவோர் எவருமில்லை) அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். (அல்-குர்ஆன் 6: 17).

இதுபோன்ற செயல்கள் அனைத்தையும் தடுத்துக் கொண்டு உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணித்து வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தை பெறுவோமாக!

எழுதியவர்/பதிந்தவர்/உரை ரா.ஹாஜா முகையிதீன்

260 போலி மருத்துவர்கள் கைது!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாள்களாக நடத்தப்பட்ட சோதனையை அடுத்து 260 க்கும் அதிகமான போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

முறையான மருத்துவக் கல்வி இன்றி, தாங்கள் மருத்துவர்கள் என்று கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்களைக் கண்டறிந்து களையும் பணி தமிழகம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டது.

வெள்ளிக் கிழமையன்று சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற சோதனைகளின் போது இத்தகைய போலி மருத்துவர்கள் 171 பேர் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமையன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில், சென்னை புறநகரில் 2 பேர், திருவள்ளூர் மாவட்டம் 5 பேர், தேனி மாவட்டம் 25 பேர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் 31 பேர், கிருஷ்ணகிரி, நாமக்கல் 11 பேர், வேலூர், திருவண்ணாமலை 8 பேர், திருநெல்வேலி 2 பேர், ஈரோடு 6 பேர், திருவாரூர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆனதை அடுத்து, இதுவரை கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்களின் எண்ணிக்கை 266ஆக உயர்ந்துள்ளது.

ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம் - முக்கிய தகவல்கள்

ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம்" என்ற பெயரில் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதியதை அடுத்து பாஜகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. பாஜகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் நாட்டுக்கு நல்லதல்ல என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கும் அளவு பாஜக நிலைகுலைந்தது. ஜஸ்வந்த் சிங் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் கூறியுள்ளார் என்பதை பார்போம்

  • ஜின்னா, இந்தியராக இருந்தார். இந்திய மண் தான் அவரை பெரும் தலைவராக உருவாக்கியது. ஒருங்கிணைந்த இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுள்ளார்.
  • சிறுபான்மையினர் என்ற கோஷம், பிரிவினைக்காகவே எழுப்பப்பட்டது. ஜின்னா பெடரல் அமைப்புடன் கூடி இந்தியா அமைய விரும்பினார். முஸ்லிம்கள் தனி அதிகாரத்துடன் வாழ விரும்பினார். இந்த கோஷம், படிப்படியாக எல்லா மட்டங்களிலும் பரவி, ஐக்கிய இந்தியா என்ற பெரிய மாளிகையை தகர்க்கும் அபாயத்துக்கு போனது. இதற்கு தீர்வு என்ன? "பிரிவினை ஒன்று தான் வழி' என்கிறார் ஜின்னா. நேரு, வல்லபாய் படேல் மற்றும் காங்கிரசில் உள்ள தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். இப்படித்தான் பாகிஸ்தான் உதயமானது.
  • ஜின்னா இந்துக்களையோ, இந்து மதத்தையோ எதிர்க்கவில்லை; காங்கிரஸ் கட்சியைத் தான் எதிர்த்தார். அதுதான் முஸ்லிம் லீகின் உண்மையான எதிரியாக திகழ்ந்தது. பீகார் உட்பட சில மாநிலங்களில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் உருவானபோது, முஸ்லிம்களை காக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்பதை நிரூபித்தார் ஜின்னா. அப்போது தான், இந்து ராஜ்யம் உருவாக்கப்படுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது.
  • அவருடன் நான் பலமுறை உரையாடியதில் அவர் இந்துக்களுக்கு எதிராகவே இந்து மதத்திற்கு எதிராகவோ பேசியதில்லை.
  • அவரது எதிர்ப்பு, போகப்போக தான் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டது. அதிலும், காங்கிரஸ் தலைமை மீது அவருக்கு அதிருப்தி வேரூன்ற காரணமாகவும் இருந்தது என்று அவரது தனிச் செயலர் எம்.ஆர்.ஏ. பெய்க் கூறியுள்ளார்.
  • இப்படிப்பட்ட பலகட்டங்களில் மதம் என்பது ஒரு பொருளாகவே இருந்ததில்லை. அவர் தன்னை மதவாதி என்று காட்டிக் கொண்டதே இல்லை. பிரிவினைக்கு பின், அவருக்கு அப்படிப்பட்ட தோற்றத்தை பாகிஸ்தான் தந்தது. பாகிஸ்தான், தனி நாடாக ஜின்னா தேவைப்பட்டார். அதுபோல, ஜின்னாவின் தேவைகளை பூர்த்தி செய்ய பாகிஸ்தான் தேவைப்பட்டது என்பதே உண்மை.
  • சில கசப்பான உண் மைகளை சொல்லித் தான் ஆக வேண்டும். 1939 முதல் 1947ல் நாடு பிரிவினைக்குள்ளானது வரை பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, நாட்டின் எதிர்காலம் பற்றிய உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளுதல், பரந்த கண்ணோட்டம், திடமான குறிக்கோள் போன்றவை இல்லாததை சொல்ல வேண்டும்.
  • மவுலானா ஆசாத் தன் புத்தகத்தில் எழுதியது போல, பிரிவினையை தவிர்க்க இந்தியா மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு ஆகிய விஷயங்களில் பெரும் தன்னாட்சி அளித்து தனி மாநிலங்களை அமைத்திருக்கலாம். இந்த யோசனையை மகாத்மா காந்தி ஏற்றார். ஆனால், சர்தார் படேல் ஏற்கவில்லை.
  • இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்றும் இன்று தனிநாடுகள். அடிப்படையில் சில விஷயங்களை மறக்க முடியாது. கடந்து போனது, கடந்ததாகவே எண்ணினாலும், மறைந்து விடாது. புதிதுபுதிதாக விஷயங்கள் உருவாகி, புதிதாக தகவல் வெளிவரத்தான் செய்யும்.

நீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது: நீதிபதி இக்பால்!

நீதித்துறையில் லஞ்சம் மற்றும் ஊழலை சகித்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி எம்.ஒய். இக்பால் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெள்ளிக் கிழமையன்று பதவியேற்றுக் கொண்ட பின், உயர் நீதிமன்ற வளாகத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்டு நீதிபதி இக்பால் பேசியதாவது:

தமிழக மக்களுக்கு நீதி பரிபாலனை செய்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். சென்னை ஐகோர்ட்டு என்பது பாரம்பரியமிக்க நீதி பரிபாலனை செய்துகொண்டிருக்கும் ஒரு கோவிலாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு நீதி வழங்கும் விஷயத்தில் நீதிபதிகளும், வக்கீல்களும், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறார்கள். அதாவது, உலகத்தில் நீதி வழங்கும் பணிக்காக கடவுளால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள்.


நீதி பரிபாலனை என்பது ஒரு தெய்வீக பணி. ஒவ்வொரு வழக்கிலும் நீதி கிடைத்துவிடாதா? என்பதுதான் ஒவ்வொரு மக்களின் கண்களிலும் தென்படும் நம்பிக்கை. இதை நிறைவேற்றுவதற்கு வக்கீல்களும், நீதிபதிகளும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, நல்லொழுக்கம், தர்மம் ஆகியவற்றின் அடிப்படையிலும் நாம் செயல்படுவது அவசியம்.


நீதி என்னும் புனித நீரூற்றை ஊழல் என்ற கறை படிந்த கரங்களால் மாசுபடுத்தக்கூடாது. ஒவ்வொரு நீதிபதிகளும் எப்பேற்பட்ட சூழ்நிலைகளிலும் நியாயமாகவும், நேர்மையாகவும் இருப்பது அவசியம். வக்கீல்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு முழுமையான நீதியை வழங்க முடியாது. வழக்கை நீதிபதிகள் நுட்பமாக கவனிக்காத பட்சத்தில், ஒரு நல்ல வாதத்தை வக்கீல்கள் வைக்க முடியாது. நீதிமன்றத்தில் நல்ல சூழ்நிலை நிலவ வேண்டுமானால் நீதிபதிகள், வக்கீல்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும்.


ஒரு தனி மனிதனுக்கு நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றால், அவன் விரக்தியில் சட்டத்துக்கு புறமான முறைகளை பின்பற்ற ஊக்கமளித்துவிடும். இதுபோன்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டுவிட்டால் கும்பலாக சேர்ந்து நீதி பெற முயற்சிப்பது, உடனடியாக நீதி பெறுவதற்கு ஏதாவது சட்டவிரோத காரியங்களை மேற்கொள்வது, குற்றவாளிகளுடன் இணைந்து கொள்வது போன்ற அவலநிலை ஏற்பட்டு, சமூக விரோதிகளை அதிகரிக்க செய்திடும்.


நீதிமன்ற புறக்கணிப்புகளை கோர்ட்டு ஊழியர்களும், வக்கீல்களும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு உறுதி செய்யவேண்டும். எந்தவொரு பிரச்சினையுமே பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். நீதிபதிகள், வக்கீல்கள் இடையே பிரச்சினைகள் உருவானால், அதை தீர்ப்பதற்கு வெளியில் உள்ளவர்களை அழைக்க கூடாது. வக்கீல்கள்தான் கோர்ட்டின் அதிகாரிகளாக இருக்கின்றனர். நீதி நிர்வாகம் செய்வதற்கு அவர்களின் உதவி அதிகம் தேவை. ஒவ்வொருவரும் பரஸ்பரம் மரியாதை கொடுத்து நடந்துகொள்வது மூலம் ஒரு ஆரோக்கியமான நல்லெண்ணத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்.


பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் ஏழை மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நீதி பரிபாலனை முறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஊழல் எந்த வகையிலும் இருக்கக்கூடாது. நீதித்துறையின் ஒழுக்கத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கேடு வந்துவிடக்கூடாது. இதுதான் நீதித்துறையின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது.


நீதித்துறை ஊழல் நிறைந்ததாக இருந்தால் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு, அதனால் சமூக ஒழுக்கம் கெட்டுவிடக்கூடும். எங்கோ நடக்கும் ஒருசில ஊழல் சம்பவங்களால் ஒட்டுமொத்த நீதித்துறையையே ஊழல் மிகுந்ததாக கூறிவிட முடியாது. நீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது. ஊழல் பேர்வழிகளுக்கு நீதி பரிபாலனை முறையில் இடமில்லை. கொடுக்க முடியாததை கொடுப்பதாக யாரும் உறுதி அளிக்க கூடாது. சமுதாயத்தில் பின்தங்கிய மக்களும் நீதி பெறுவதற்காக மற்றவர்களைபோல், அவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.


நீதித்துறைக்கு நீண்ட நாட்களுக்கு எது சரியாக உள்ளதோ அதை மட்டுமே செய்யவேண்டும். பிரபலத்துக்காகவோ, அரசியலுக்காகவோ எதுவும் செய்யக்கூடாது. ஏழை எளிய மக்கள், சிறுபான்மையினர் நலன் புறக்கணிக்கப்படக்கூடாது. பிரிவினையை ஏற்படுத்தும் அரசியலில் தங்களை ஈடுபடுத்த வேண்டாம். ஒருதரப்பு மக்களுக்கு மட்டும் பயன் ஏற்படும் வகையில், நலிந்த மக்களை புறக்கணித்துவிட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

11 ஜூன், 2010

இந்தியா வெட்கப்பட வேண்டும்

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை நமது லட்சியமாகக் காட்டும் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள், அமெரிக்கா தனது தேசத்தையும், தேசமக்களையும் மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுவதை ஏன் முன்னுதாரணமாகக் கொள்ள மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இந்தியாவின் இறையாண்மையும், தன்மானமும் சின்னச்சின்ன விஷயங்களில்கூடப் பேரம் பேசப்பட்டுவிடும்போது, அதிர்ச்சி அடைவதைத் தவிர நமக்கு வழிதான் என்ன இருக்கிறது. கோத்ராவைத் தொடர்ந்து நடைபெற்ற மதக்கலவரத்தை அவர் கட்டுப்படுத்தவில்லை என்பதும், கண்களை மூடிக் கலவரம் காட்டுத்தீயாகப் படர்வதை அனுமதித்தார் என்பதும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிமீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள். 2002-ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவரங்களின் பின்னணியில், மனித உரிமை மீறல் என்கிற காரணம் காட்டி அவருக்கு அமெரிக்க அரசு நுழைவு அனுமதி மறுத்துவிட்டது. அமெரிக்கா மட்டுமல்ல, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் அவர் தங்களது தேசத்துக்கு விஜயம் செய்ய அனுமதி மறுத்தன. மனித உரிமை மீறல் நடந்ததாகக் கூறப்படுவது இந்தியாவில். சம்பந்தப்பட்ட நபரோ, இந்தியாவின் முக்கியமான ஒரு மாநிலத்தின் முதல்வர். ஆனால், அவர்களது நாட்டுச் சட்டப்படி, மனித உரிமை மீறலாகக் கருதப்படுவதைச் செய்த ஒருவர் தங்களது தேசத்துக்கு விஜயம் செய்வதை அந்த நாடுகள் விரும்பவில்லை. இந்தியாவைப் பகைத்துக் கொள்வோம் என்று பயப்படவில்லை. தயவுதாட்சண்யம் பார்க்கவில்லை. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அமெரிக்காவுக்கு சொற்பொழிவாற்ற, அந்த நாட்டுப் பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், அமெரிக்க விமானத்தில் ஏறுவதற்கு எல்லா பயணிகளையும்போல அவரும் சோதனைக்கு உள்படுத்தப்படுகிறார். எந்தப் பிரமுகரானாலும் விதிவிலக்கில்லை என்று கூறிவிடுகிறார்கள். இது எங்கள் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்று விளக்கம் தருகிறார்கள். தயவுதாட்சண்யத்தையும், மரியாதையையும்விடத் தங்களது தேசப் பாதுகாப்புதான் அவர்களுக்கு முக்கியம். பிரபல இந்தி நடிகர் ஷாரூக்கானும் இதேபோன்ற சோதனையை எதிர்கொள்ள நேர்ந்தது உலகறிந்த செய்தி. இங்கே இந்தியாவில் என்ன நடக்கிறது? இலங்கை அதிபர் ராஜபட்ச அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். வரும்போது தன்னுடைய குழுவில் தைரியமாக இந்தியாவில் குற்றவாளியாகத் தேடப்படும் ஒருவரை, அமைச்சர் என்கிற அந்தஸ்துடன் அழைத்து வருகிறார். அவரைப் பிரதமருக்கு அறிமுகப்படுத்தி, கைகுலுக்க வைக்கிறார். என்னருகில், எனது நிழலில் இருந்தால் உன்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று உறுதி அளித்தாரோ என்னவோ, யாருக்குத் தெரியும்? அதிபர் ராஜபட்சவுடன் வரும் குழுவில் இடம்பெறப் போகிறவர்கள் யார், எவர்? அவர்களது பின்னணிதான் என்ன? இவையெல்லாம் தெரியாமல் அனுமதி வழங்கப்பட்டதா? இந்தியாவிலிருந்து பிரதமருடன் வெளிநாடு செல்லும் அவரது தனிச்செயலர், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அனைவருமே முழுமையாக விசாரிக்கப்பட்ட பிறகுதான் பிரதமர் விஜயம் செய்யும் நாடுகளில் நுழைவு அனுமதி வழங்கப்படுகிறது. பிரதமரைத் தவிர, அனைவருமே சோதனை செய்யப்படுகிறார்கள். அப்படியானால், இந்தியப் பிரதமரைவிட இலங்கை அதிபர் சக்தி வாய்ந்தவரா? இந்தியா என்ன இலங்கையின் அடிமை நாடா அல்லது நாம் அதிபர் ராஜபட்சவை அண்டிப் பிழைக்கிறோமா? இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த இலங்கையின் கலாசாரம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்மீது இந்திய நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் என்னென்ன தெரியுமா? 9 பேர் கொண்ட கூட்டத்துடன் டக்ளஸ் தேவானந்தா 1986-ல் சென்னை சூளைமேட்டில் சாலையில் போவோர் வருவோர்மீது கண்மூடித்தனமாகச் சுட்டு 5 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார், அந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி. 1989-ல் பணத்துக்காக சிறுவன் ஒருவனைக் கடத்திய வழக்கும் இவர்மீது நிலுவையில் உள்ளது. இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல், விசாரிக்காமல் அவருக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியதா? ஏன் வழங்கியது? தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை மாஜிஸ்திரேட் உத்தரவில்லாமல், வாரண்ட் இல்லாமல் பார்த்த உடனேயே கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டே! ஏன் செய்யவில்லை? அப்படியானால் இது அரசுக்கே தெரிந்து நடந்த ஒரு நிகழ்வே தவிர எதிர்பாராத ஒன்று என்று ஏற்றுக் கொள்வதற்கில்லை. இதுவரை குவாத்ரோச்சி போன்ற தேடப்படும் குற்றவாளிகளைத் தப்ப அனுமதித்த குற்றமும், வெளிநாடுகளிலிருந்து கைதுசெய்து அழைத்து வராத குற்றமும்தான் நமது அரசு செய்து வந்தது. இப்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் அரசுமுறை விருந்தினர்களாக வரவேற்கப்படவும் அனுமதி அளிக்கத் தொடங்கிவிட்டிருக்கிறது இந்திய அரசு. விரைவிலேயே குவாத்ரோச்சி இத்தாலி நாட்டின் அமைச்சராகி விட்டால், அரசுமுறைப் பயணமாக அவர் தைரியமாக, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வந்து போகலாம் போலிருக்கிறது. போபால் விஷவாயுக் கசிவு வழக்கின் முதல் குற்றவாளி வாரன்ட் ஆண்டர்சன்கூட, அதிபர் ஒபாமாவுடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்து போனாலும் ஆச்சரியமில்லை. மனதை ஒரு கேள்வி நெருடுகிறது. 1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான கையோடு இலங்கை அதிபர் ஜெயவர்த்தனவின் முன்னிலையில் கடற்படை அணிவகுப்பைப் பார்வையிடும்போது நமது இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை ஒரு கடற்படை வீரர் துப்பாக்கியால் தாக்கிக் கொல்ல முற்பட்டாரே, நினைவிருக்கிறதா? அந்த 26-வயது விஜயமுனிகே ரோகணா என்கிற கடற்படை வீரரின் தாக்குதலால் ராஜீவ் காந்தி அன்று கொல்லப்பட்டு, இப்போது அதே ரோகணா ஓர் அமைச்சராக அதிபர் ராஜபட்சவுடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தால், நமது இந்திய அரசு அவரை வரவேற்றிருக்குமா? பிரதமர் ரோகணாவுடன் கைகுலுக்கி மகிழ்ந்திருப்பாரா? சூளைமேட்டில் டக்ளஸ் தேவானந்தாவின் குண்டுகளுக்குப் பலியான அந்த முகம் தெரியாத இந்தியக் குடிமகனுக்கு நமது அரசு தரும் மரியாதை இதுதானா? ஓர் இந்தியக் குடிமகனைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைவிலங்கு மாட்டப்பட வேண்டிய ஒரு நபருடன் கைகுலுக்கப் பிரதமருக்கு எப்படி மனம் வந்தது? நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் நம்பிக்கை தகர்கிறதே... வெட்கக் கேடு!(dinamani)

வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து


நீங்கள் எப்படி இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள்? என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்வார்கள். ஒருவர் தனக்குப் பிடித்த உணவை ருசித்துச் சாப்பிடுவது சந்தோஷம் தரும் என்பார். இன்னொருவரோ நன்றாக உடுத்துவது மனதிற்கு சந்தோஷம் தருகிறது என்பார். பிறர்படும் துன்பத்தைப் பார்த்து கூட சந்தோஷப்படும் ஒரு சிலர் இருக்கும் இவ்வுலகில் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை ஐந்தைந்தாக பட்டியலிட்டுள்ளேன்.

வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருக்க சில எளிய ஆலோசனைகள்:

1. மற்றவர் செய்யும் தவறுகளை மன்னித்தல்

2. இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் எளிய வாழ்க்கை வாழ்தல்

3. நடப்பவை அனைத்தையும் நல்லதற்கே என்ற எண்ணத்துடன் கவலை கொள்ளாமல் இருத்தல்

4. தினமும் குறைந்தது ஒருவருக்காவது உதவி செய்தல்

5. அளவுகடந்த அதிக ஆசை கொள்ளாமல் இருத்தல்

வாழ்வில் ஆரோக்கியத்துடன் இருக்க சில எளிய ஆலோசனைகள்:

1. தினமும் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் உறக்கத்திலிருந்து மீண்டுவிடுதல்

2. தினமும் குறைந்தபட்சம் இரு வேளை (காலை மற்றும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்) பல் துலக்குதல்

3. தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நடத்தல்

4. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்த்து காய்கறி, பழவகைகளை உணவில் அதிகம் சேர்த்தல்

5. இரவு முடிந்தவரை சீக்கிரமாகப் படுக்கைக்கு செல்லுதல்

வாழ்வில் பேணப்பட வேண்டியவைகளில் சில:

1. மனதை ஒருமுகப்படுத்தி இறைதியானம் புரிதல்

2. சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இன்முகத்துடன் முகமன் கூறல்

3. யாரையும் துச்சமென கருதாமல் பிறர் கூறும் கருத்துக்களையும் செவி கொடுத்து கேட்டல்

4. எந்த செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன் அதனால் விளையும் பயன் மற்றும் கெடுதலைக் குறித்து சிந்தித்தல்

5. முடிந்தவரை தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்த்து மவுனம் கடைபிடித்தல்

வாழ்வில் தவிர்க்கப்பட வேண்டியவைகளில் சில:

1. ஒருவர் இல்லாதபோது அவரின் தவறுகளை மற்றவரிடம் கூறுதல்

2. அனுமதியின்றி மற்றவரின் வீடுகளினுள் நுழைதல்

3. எதிர்பாலருடன் அவசியமின்றி உரையாடுதல்

4. மற்றவர்களின் பொருட்களை அனுமதியின்றி உபயோகித்தல்

5. தவறு செய்பவர்கள் எனத் தெரிந்தபின்பும் அதை அவர்களுக்கு உணர்த்தாமல் அவர்களோடு நட்பு கொண்டாடுதல்
நன்றி:சத்யமார்க்கம்


நல்ல(!) நேரம்


மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.

உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.

ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், "காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?" என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.

இதேபோல்தான் ஒரு பொருளை, ஒரு நிறத்தை, ஒரு எண்ணை, ஒரு நாளை அல்லது நேரத்தை நல்லதாகவோ தீயதாகவோ மனிதன் கருதுவது இன்றைய நவீனகாலத்திலும் அன்றாட நிகழ்வுகளாகக் காண முடிகிறது. 13 என்ற எண் தீமை பயப்பது என்பதாகக் கருதி அதைத் தமது இல்லங்களுக்கோ வாகனங்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ தவிர்த்துக் கொள்ளக்கூடிய மக்களை இன்றும் மேற்குலகில் பரவலாகக் காணமுடிகிறது. சில முன்னேற்றமடைந்த நாடுகளிலும் வீட்டு எண்ணிக்கையில் 13ஐத் தவிர்ப்பதும், மாடிக் கட்டடங்களிலும் 12ஆவது மாடியை அடுத்து 13ஐத் தவிர்த்து அடுத்த எண்ணான 14ஐத் தருவது போன்றவையும் மூடநம்பிக்கையாகும்.

அதேபோல் ஒரு சில எண்களை/பொருள்களை அதிர்ஷ்டமானதாகக் கருதி அந்த எண்களை/பொருட்களைத் தேடி அதிக விலைகொடுத்துப் பெறுதலும் அந்த எண்/பொருள் தனக்கு அதிகமான இலாபத்தை அல்லது பாதுகாப்பை வழங்கிடும் என்று கருதும் மூடநம்பிக்கையும் நடப்பில் உள்ளது.

அறிவியல், கல்வி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று எல்லாவிதத்திலும் வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படும் தற்போதய காலத்திலும் இந்த மூடநம்பிக்கை எனும் நோய் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

இதுபோன்ற மூடநம்பிக்கைகளைக் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் முதல் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் நன்கு படித்த இளைஞர்கள் முதியவர்கள் என்ற அனைவர்களிடமும், பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள் முதல் ஆன்மீகவாதிகளிலும் பரவலாகக் காணமுடிகிறது. சிலர் இதற்கு மதச் சாயம் பூசிடுவதும் அதன் மூலம் இதைச் சரிகாணுவதும் இம்மடமையை ஆதரிக்கும் சிலருடைய துணையுடன் இதைத் தொடர்ந்து நிலை நாட்டிவருவதும் சுய இலாப நோக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒரு துர்ப்பாக்கியமான காரியம் ஆகும்.

ஒரு நாள் என்பது நல்லநாள் அல்லது கெட்டநாளாக; ஒரு நேரம் என்பது நல்லநேரம் அல்லது கெட்டநேரமாக எப்படி அமையும்? ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு நல்லதும் மற்றவர்களுக்குத் தீயதும் இழப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன என்பதை எவரும் மறுத்திட இயலாது.

உதாரணத்திற்கு ஒரே நேரத்தில் பிறப்புகளும் இறப்புகளும் இவ்வுலகத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சிலர் நோயுறுவதும் நிலர் நிவாரணம் பெறுவதும், சிலர் கல்வியில் தேர்ச்சி பெறுவதும் சிலர் தோல்வியுறுவதும், சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் ஆகும். அதே போல் ஒரே நேரத்தில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் இரு அணிகளில் ஒன்று வெல்வதும் ஒன்று தோல்வியுறுவதும் இயல்பானதும் தவிர்க்க இயலாத ஒன்றுமாகும்.

இன்னும் குறிப்பிட்ட ஒருநேரத்தில் ஒரே வீட்டில் திருமணம் அல்லது பிறப்பு போன்றதும் அதே வீட்டில் அதே குறிப்பிட்ட நேரத்தில் இறப்புகளும் ஏற்படுவதையும் காண்கிறோம். குழந்தை பிறக்கும்போது மரணித்த தாயும், தாய் இருக்க மரணித்த குழந்தையும் பிறந்த இரு குழந்தைகளுள் ஒன்று மரணித்தும் மற்றொன்று உயிருடனும் இருக்கவும் காண்கிறோம். மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சில பிறப்புகள் சில இறப்புகள் போன்ற எண்ணற்ற நேர்மறை எதிர்மறையான நிகழ்வுகள் என்பதெல்லாம் ஒரே நேரத்தில் நடந்து, "நேரம் என்பதில் நல்லதோ கெட்டதோ இல்லை" என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன,

ஒரு நேரம் நல்லது எனில் அதில் எங்கும் யாருக்கும் எந்த ஒரு கெடுதியும் இழப்பும் துன்பமும் கவலையும் நோயும் கஷ்டமும் ஏற்படக் கூடாது. அப்போதுதான் அது "நல்ல நேரம்" ஆகமுடியும். அப்படி ஒரு நேரம் இருக்கிறதா என்றால் இல்லையென்பதே உண்மை. அதேபோல் ஒரு நேரம் கெட்ட நேரம் என்றால் அதில் எங்கும் யாருக்கும் எந்த ஒரு நல்லதும், இலாபமும், பலனும், சந்தோஷமும், இன்பகரமானதும் நிகழவே கூடாது. அப்போதுதான் அது கெட்ட நேரம் என்றாகும். இந்த நிலையும் இல்லை என்பதே மறுக்க இயலாத உண்மை.

அதேபோல், "அவருக்கு நேரம் சரியில்லை; இவருக்கு நல்ல நேரம்; நல்ல காலம்; கெட்ட காலம்" என்று நிகழ்வுகளை நேரத்தோடு தொடர்பு படுத்துவதும் தவறான அடிப்படையில் அமைந்த ஒரு மூடநம்பிக்கையேயாகும். "இந்த மாதத்தில் இந்த நாளில் அல்லது இந்த நேரத்தில் சில புதிய காரியங்கள், திருமணம், புதிய வீடு புகுதல், வியாபாரங்கள் போன்ற நல்லவற்றை துவக்கக் கூடாது; அது நிறைவேறாது; அது நஷ்டமானதாக அமையும்; இழப்பை ஏற்படுத்தும்" என்று கருதி அவற்றைத் தவிர்த்து எச்சரிக்கையாக நல்லநாள், நல்லநேரம் பார்த்து துவங்கப்பட்ட திருமணம் போன்ற எத்தனையோ காரியங்கள் கெடுதியையும் மண விலக்குகளையும் கொலை, தற்கொலை போன்ற உயிரிழப்பையும் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பரவலாக சமுதாயத்தில் காணமுடிவதும் மூடநம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் சான்றுகளாகும்.

"எல்லாம் இறைவிருப்பப்படி நமக்கு நிகழ்கின்றன; அந்த இறைவனின் நாட்டமின்றி எந்த ஒரு நன்மையும்-தீமையும் நோயும்-நிவாரணமும், இலாபமும்-நஷ்டமும், இன்பமும்-துன்பமும், பிறப்பும்-இறப்பும், என்று எதுவுமே ஏற்படுவது இல்லை. எல்லாம் அவன் நாட்டப்படியே நடைபெறுகின்றன" என்று போதிக்கும் இறைமார்க்கமாம் இஸ்லாத்தில் மூடநம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லையென்ற போதும் "நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம்" என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம்கள் சிலரிடமும் இதுபோன்ற ஒருசில மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன என்பது வருத்தத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.

முழு மனிதசமுதாயத்திற்கும் வழிகாட்டிட ஏக இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாம் எனும் மார்க்கமும் குர்ஆன் நபிவழிகள் எனும் இறை ஒளியின் மூலம் அனைவருக்கும் வழிகாட்டியாக வாழ வேண்டிய முஸ்லிம்களில் சிலர் இது போன்ற அறியாமை இருளில் மூழ்கியிருப்பது கைச்சேதமே.

"ஸஃபர் மாதம் என்பது பீடைமாதம்" என்று சில முஸ்லிம்கள் கருதுவதும் கூறுவதும் இந்த மாதத்தில் நல்ல காரியங்களைத் துவக்காமல் தள்ளிப் போடுவதும், திருமணங்கள், வியாபாரங்கள் போன்ற நல்ல நிகழ்வுகளைச் செய்தால் அது கேடாக முடியும் என்று தவிர்ப்பதும் புதிதாக மணமுடித்துள்ள தம்பதியரை இம்மாதத்தில் இல்லறம் நடத்த விடாமல் (நடத்தினால் பிறக்கும் குழந்தைக்குக் கேடு, அல்லது குழந்தையால் அவர்களுக்குக் கேடு ஏற்படும் என்று) பிரித்து வைத்தலும், புதுமனை புகுதல் அல்லது புதுவீடு கட்டுதல் போன்றவற்றைத் தள்ளிப் போடுதல் ஆகிய - சில முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ள - அனைத்தும் எவ்வித ஆதாரமுமற்ற கண்டிக்கப் படக்கூடிய மூடநம்பிக்கைகளாகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் கியாமத் எனும் இறுதி நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் (நம்பிக்கை)கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும்" ஆதாரம் : முஸ்லிம்.

மேற்காணும் நபிமொழியின்படி "எல்லாவித நன்மையும் தீமையும் அல்லாஹ் வித்தித்துள்ள விதியின் படியே நிகழ்கிறது" என்று ஒரு மூஸ்லிம் நம்ப வேண்டும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும், பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

சோதனைகள் நன்மைகள் தீமைகள் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன என நம்ப வேண்டிய முஸ்லிம்களுள் சிலர், ஸஃபர் மாதம் என்பது பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையைக் கழிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன்கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து, சில சடங்குகளையும் செய்து அந்தப் பீடையைப் போக்கவேண்டும் என்று மூடநம்பிக்கை கொண்டு, பல வீண் விரயமான சடங்கு சம்பிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் செய்கின்றார்கள்.

மேலும் மாவிலையில் குங்குமப் பூவின் மையினால் சில வாசகங்களை எழுதிக் கரைத்துக் குடிப்பதும் அதன் மூலம் பலா-முஸீபத்துகள், பீடைகள், நோய்கள், கஷ்டங்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாவல் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூடநம்பிக்கையுமாகும். இஸ்லாத்திற்கு மாற்றமான இவ்வாறான மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு "அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது" என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.

ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை அல்லாஹ்வோ நபி(ஸல்) அவர்களோ நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறைவசனமோ நபிமொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதைத் தடுக்கும் நபிமொழியைத்தான் நாம் காண் முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது; ஸஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசு என்பதெல்லாமில்லை" ஆதாராம்: முஸ்லிம்.

ஸஃபர் மாதத்தைப் பீடையுள்ள மாதம் என்பதற்கு, சிலர் கூறும் காரணம், "நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்ததுபோல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும்" என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையன்று.

நோயும் நிவாரணமும் அல்லாஹ்வின் விதிப்படி ஏற்படுபவை; "நான் நோயுற்றால் குணப்படுத்துபவன் அவனே" (அல்குர்ஆன் 26:80) என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள்?

ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள். அந்த மாதத்தை/நாளை யாராவது பீடையுள்ள மாதம்/நாள் என்று கூறுகின்றார்களா? மாறாக, அந்த நாளை, எவருடைய பிறந்த நாளையும் சிறப்பித்துக் கொண்டாடாத நபி(ஸல்) அவர்களுக்கே பிறந்த நாளாக - மீலாது விழா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். ஏன் இந்த முரண்பாடு?

நோய் வரும், தீரும். மரணம் அவ்வாறில்லையே!

பல அறிவிப்புகளின்படி நபி (ஸல்) அவர்கள் பிறந்ததும் இறந்ததும் ரபீஉல் அவ்வல் பிறை 12இல்தான். அந்த நாளையோ வேறு எந்த நாளையுமோ நல்லநாள்/கெட்டநாள் என்று ஏற்படுத்திக் கொண்டு, கொண்டாட்டம்/சோகம் போன்றதை அனுஷ்டிப்பதற்கு மார்க்கத்தில் சிறிதும் இடமில்லை.

ஆகவே ஸஃபர் மாதத்தைப் பீடைமாதம் என்றோ கெட்டமாதம் என்றோ கூறாமல் மற்ற மாதங்களைப் போன்று நினைத்து நமது அன்றாட காரியங்களைத் தொடரவேண்டும்

இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்:

"ஆதமுடைய மகன் (மனிதன்) காலத்தைக் குறை கூறுவதன் மூலம் என்னை (அல்லாஹ்வை) குறை கூறுகிறான். ஏனெனில் நானே காலமாக (காலத்தை இயக்குபவனாக) இருக்கிறேன்" ஆதாரம் : புகாரி 4826.

காலத்தையும் நேரத்தையும் குறை கூறுவது மூடநம்பிக்கை மட்டுமின்றி நம்மைப் படைத்த அல்லாஹ்வைக் குறைகூறும் ஒரு பாவமான காரியமாகும் என்பதை உணர்ந்து இதைப் போன்ற அனைத்து வீணான மூடநம்பிக்கைகளைக் களைந்து நமது பொன்னான நேரத்தையும் செல்வத்தையும் அவனது உண்மையான மார்க்கத்தை அறிந்து பின்பற்றிச் செலவழித்து இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றிட வழி வகுப்போமாக. ( நன்றி: சத்தியமார்க்கம் )

வெற்றிக்குப் பத்து வழிகள்!

நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் என்று உங்களால் கூற முடியுமா? நிச்சயமாக உங்களால் முடியாது! அடுத்த ஆண்டு மரணிக்கலாம்; அடுத்த மாதம் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த நிமிடம்கூட நீங்கள் மரணிக்கலாம். ஆகவே அதற்குமுன்

உங்கள் வாழ்வில் நீங்கள் என்ன அடைந்தீர்கள்?
உங்களின் கனவு மற்றும் இலட்சியம் என்ன?

உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் போட்டுள்ள பெரிய திட்டம் என்ன?

உங்கள் மரணத்துக்குப் பின் நீங்கள் எப்படி நினைவுகொள்ளப் படுவீர்கள்?

ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை பிறந்தோம்; வாழ்ந்தோம்; மரணித்தோம் என்ற வகையில் இவ்வுலகில் வாழ முடியாது! அவ்வாறு எவ்வித இலட்சியமோ அதை அடைய முயற்சியோ இல்லாத வாழ்க்கை என்பது வீணானதுதான்!

மரணத்துக்குப் பின் என்ன? என்பதைக் குறித்துத் திட்டமிட்ட வாழ்வை எதிர்நோக்குவோர் மட்டுமே இவ்வுலகத்தின் முக்கியத்துவத்தை உணர முடியும். அவ்வாறான ஒரு திட்டமிடலோடு வாழ்பவர்களால் மட்டுமே இலட்சியத்தை அடைய முடியும்.

இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்பவர்கள், அவர்களின் இலட்சியமான சுவர்க்கத்தை அடையவும் மரணத்திற்குப்பின் ஈருலகிலும் நினைவுகூரப்படவும் எளிதான வழி உள்ளது. அதற்கு ஒவ்வொருவரும் தம் மரணத்திற்குமுன் கீழ்க்காணும் 10 விஷயங்களைச் செய்து முடித்து விட்டால் போதும்.

தயாரா நீங்கள்?

1. உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்

முஸ்லிம்களாகிய நமக்குப் பல கட்டாயக் கடமைகள் உண்டு. உதாரணமாக, ஐவேளைத் தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் நிறைவேற்றுதல், ரமலானில் ஒரு மாதகாலம் நோன்பு நோற்றல், ஜக்காத் கொடுத்தல், ஜமாஅத்தாக இருத்தல், தலைமைக்குக் கட்டுப்படல், அநீதியை எதிர்த்துப் போராடுதல் ஆகியன. ஹஜ்ஜைப் பொருத்தவரை பெரும்பாலான வசதியுள்ளவர்கள் நினைப்பதுபோல், "வயதான பின்னர் செய்வேன்" என்று தள்ளிப் போடாமல் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு விரைவான முக்கியத்துவம் கொடுங்கள். விட்டுப்போன தொழுகைகளுக்காகக் குற்றம் பிடிக்கப்படாமல் இருக்க, இயன்றவரை சுன்னத்-நஃபில் தொழுகைகளை அதிகப்படுத்துங்கள். அத்தோடு, "இனிமேல் எந்த ஒரு கடமையான தொழுகையையும் விட்டு விடமாட்டேன்" என்று இப்பொழுதே உறுதி மொழி எடுப்பதோடு, அதனை இந்நிமிடத்திலிருந்தே செயல்படுத்த ஆரம்பியுங்கள். "தொழாதவன் என்னைச் சார்ந்தவனல்லன்" என்பதும் "தொழாதவன் காஃபிராகி விட்டான்" என்பதும் "முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்குமிடையிலான வித்தியாசம் தொழுகை" என்பதும் எம்பெருமானாரின் அமுதவாக்கு என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

2. கனவை நனவாக்குங்கள்

நல்லவற்றுள் எதையாவது நீங்கள் செய்ய விரும்புகின்றீர்கள் எனில், அதனைப் பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே செய்ய துவங்குங்கள். சீனப்பெருஞ்சுவரை நடந்து கடக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, பட்டதாரி ஆக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?, டாக்டரேட் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? கலெக்டராக வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புத்தகம் ஒன்று எழுத வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? சீன, ஜப்பானிய, அரபி மொழிகளைக் கற்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? எதுவாக இருந்தாலும் உடன் செயல்பாட்டில் இறங்குங்கள். ஒருபோதும் வாழ்வில் செய்யத் துடிக்கும் நல்ல விஷயங்களைத் தள்ளிப்போடாதீர்கள். கனவை நனவாக்குங்கள்!

3. பெற்றோர்களை மகிழ்வியுங்கள்!

நம் பெற்றோர்களே நமக்கு எல்லாம்! நமது மரியாதைக்கும் அன்புக்கும் கீழ்படிதலுக்கும் அவர்கள் உரித்தானவர்கள். அவர்களுடன் தினசரி குறிப்பிட்ட நேரத்தைச் செலவழிக்க முயலுங்கள். அவர்களுக்குப் பெருமை சேர்க்க முயலுங்கள்; ஒருபோதும் அவர்களின் மனதை வேதனைப்படுத்தி விடாதீர்கள். ஒன்றை எப்போதும் நினைவில் வையுங்கள்: "பெற்றோர்களை நாம் மகிழ்ச்சியாக வைத்திருந்தால், அல்லாஹ்வும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருப்பான். பெற்றோர்கள் நம் மீது கோபமாக இருந்தால், அல்லாஹ்வும் நம் மீது கோபமாகவே இருப்பான்" என்று இஸ்லாம் கற்பிக்கிறது. ஆகவே, அவர்கள் மரணிக்கும்முன், அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு அவர்களை மகிழ்வாகவும் வைத்திருங்கள். அவர்களின் மரணத்திற்குப்பின் அவர்களை நினைவுகூருங்கள்; அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்; அவர்களின் இலட்சியம் அல்லது நிறைவேற்ற நினைத்து முடியாலாகி விட்ட கடமைகள் ஏதாவது இருப்பின் அதனை நிறைவேற்றுங்கள்.

4. உலகைப் பாருங்கள்

நீங்கள் இருக்கும் இருப்பிடத்தில் மட்டுமே உலகைக் காண்பதாக இதற்கு அர்த்தம் கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின் அற்புதமான படைப்புகளைக் கூர்ந்து கவனியுங்கள். இயன்றால் ஃபாலஸ்தீனத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா, எகிப்து, மக்கா போன்ற இஸ்லாமிய வரலாற்றை எடுத்தியம்பும் நாடுகளை வலம் வாருங்கள். குறைந்தபட்சம் உங்களைச் சுற்றியுள்ள கிராம, நகரங்களையாவது வலம் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதோடு, அல்லாஹ்வின் படைப்புகளையும் அதில் உங்களின் பங்கையும் குறித்து உங்களுக்கு விளக்கித் தரும்.

5. இஸ்லாத்தைப் படியுங்கள்; அதற்கு உயிர் கொடுங்கள்!

இந்த உலகில் நீங்கள் பிறந்ததற்கான காரணத்தையும் பிறப்பின் பயனை அடைவதற்கான வழிகளையும் அறிந்து கொள்ளாமல் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போய்விடக் கூடாது. அது பின்னர் உங்களுக்கே பேரழப்பாக முடியும். ஆகவே இஸ்லாத்தைப் படியுங்கள். இறைமறையைத் திறந்து அதனை அர்த்தத்துடன் படியுங்கள். எம்பெருமானாரின் வாழ்வைப் படியுங்கள். இஸ்லாம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? என்பதை உறுதிபடுத்துங்கள். அதனை உங்கள் தினசரி வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். இது ஒன்று மட்டுமே உங்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் பாதுகாப்பாக இருக்கும்.

6. திருப்பிக் கொடுங்கள்

ஏதாவது வித்தியாசமானதாகவும் அற்புதமானதாகவும் செய்ய முயற்சி செய்யுங்கள். ஒரு அனாதையின் வாழ்வாதாரத்துக்கு உதவுதல், ஒரு மரத்தை நட்டு வளர்த்தல், ஏழைகளுக்கு உதவி செய்ய ஃபண்ட் ஒன்று துவங்குதல், ஏழைகளுக்கு உணவளித்தல், தேவையில் இருப்போருக்கு இரத்தம் வழங்குதல், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் கற்றுக் கொடுத்தல், யாருடைய பிரச்சனைகளையாவது தீர்த்து வைத்தல், லைப்ரரி ஒன்று உருவாக்குதல், வசதியற்ற மாணாக்கருக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்தல், வட்டியின்றித் தேவையுடையோருக்குக் கடனுதவி செய்யக் குழு ஏற்படுத்துதல், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கப் பயிற்சியளித்தல், குடிநீர் இல்லாத வீடுகளுக்குக் குடிநீர் கிடைக்க வசதி ஏற்படுத்துதல்..... இப்படி எதையாவது நீங்கள் மரணிக்கும் முன்னர் இவ்வுலகுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். உங்களின் மரணத்துக்குப் பின்னர் நீங்கள் இவ்வுலகில் நேர்மறையாக நினைவுகூரப்படுவதற்கு இது உதவும். உங்களின் நற்செயல்கள் இவ்வுலகில் எத்தனை காலத்திற்கு நிலைநிற்கின்றதோ அத்தனை காலம்வரை உங்களுக்கான நன்மைகள் உங்கள் ஏட்டில் பதியப்பட்டுக் கொண்டே இருக்கும். உங்களின் சுயநலமற்ற செயல்பாடுகள் நாளை மறுமைநாள்வரை உங்களுக்குப் பயனுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

7. திருமணம்

இது நபிவழியாகும். எனவே திருமணம் செய்வதன் மூலம் ஒரு நபிவழிக்கு உங்கள் மூலமாக உயிர் கொடுங்கள். உங்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் உயிர்கொடுக்க தோள்கொடுக்கத் தயாராகுபவரோடு அவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவரைத் திருமணம் புரிந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பெருமை சேர்ப்பதோடு, நல்ல குழந்தைகளாக வளர்த்தால் அதற்காகவும் நீங்கள் நன்மை வழங்கப் படுவீர்கள். உங்களின் மரபுவழி நன்மைகளை வாழ வைப்பவர்களாகவும் தங்கள் நம்பிக்கையைச் செயல்படுத்துபவர்களாகவும் மனிதாபிமானத்தோடு இறைவனின் படைப்புகளைக் காணும் நல்ல மக்களாகவும் அவர்களை வளர்த்தெடுப்பது உங்களின் இலட்சியமாக இருக்கட்டும்.

8. மன்னிப்பு கேளுங்கள்

உங்கள் வாழ்வில் நீங்கள் செய்த தவறுகளை நினைவு கூர்ந்து, உங்களைப் படைத்தவன் முன்னிலையில் சிரம்பணியுங்கள். ஒவ்வொரு இரவிலும் படுக்கைக்குச் செல்லும் முன், உங்கள் தவறுகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். நீங்கள் யாருடைய மனதையாவது வேதனைப்படுத்தியுள்ளீர்களா? மக்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட நீங்கள் காரணமாக இருந்துள்ளீர்களா? யாருக்காவது தவறு இழைத்துள்ளீர்களா? இன்றே அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். நினைவில் வையுங்கள்: நீங்கள் தவறிழைத்தவர்கள் உங்களை மன்னிக்கும்வரை, அல்லாஹ் உங்களை மன்னிப்பதில்லை! வருத்தங்களைப் பொறுத்துக் கொள்ளப் பழகுங்கள். முன்னர் உங்கள் வாழ்வில் மற்றவர்களால் உங்களுக்கு நடந்த தவறுகளையும் மீட்டிப் பார்த்து அவற்றைப் பொறுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில், நீங்கள் மற்றவர்களின் தவறுகளையும் மன்னிக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

9. கடன்களை அடையுங்கள்

நீங்கள் கடனாளி எனில், அது எத்துணைப் பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அவற்றைத் திருப்பிக் கொடுக்க இப்போதே திட்டமிடுங்கள். ஒரு நிமிடமும் இதற்காகத் தாமதிக்க வேண்டாம்! கடன் என்பது ஒரு வலி; அது ஒரு சுமையும் கூட! அதனை நிறைவேற்றவில்லையேல் அதற்காக மிகப்பெரிய பலனைத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். நினைவில் வையுங்கள்: நீங்கள் ஹஜ் செய்திருந்தால்கூட, நீங்கள் யாருக்காவது கடனாளியாக இருந்தால் உங்கள் ஹஜ் ஏற்றுக் கொள்ளப் படாமல் போகலாம். எம்பெருமானார், கடனாளியின் ஜனாஸாவுக்குத் தொழ வைக்க முன்வராததை எப்போதும் நினைவில் வையுங்கள்.

10. முன்னுதாரண மனிதராகுங்கள்

ஆமாம்! உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, முஸ்லிம்களுக்கு, முஸ்லிமல்லாதோருக்கு என அனைவருக்குமாக நீங்கள் நல்ல குணங்களுக்குச் சொந்தகாரரான ஒரு முன்னுதாரண மனிதராகுங்கள். அனைவரும் மரியாதையுடன் பார்க்கும் படியான மனிதராகுங்கள். மனிதர்கள் தங்களின் தேவைகளுக்காக உங்கள் பக்கம் திரும்ப வைக்கும்படியான நல்ல மனிதராகுங்கள். உங்கள் மரணத்துக்குப் பின்னரும் நல்ல காரணத்திற்காக நீண்ட காலம் மக்கள் நினைவுகூரும்படியான நற்பண்புகளுக்குச் சொந்தக்காரராக மாறுங்கள்.

இந்தப் பத்து விஷயங்களையும் உங்கள் மரணத்துக்கு முன் செயல்படுத்துங்கள். இவ்வுலக வாழ்க்கை என்பது மிகக் குறுகியது; எனவே இவற்றை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பியுங்கள். நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். செய்யும் செயலை அர்த்தமுள்ளதாகவும் ஒருபோதும் வருத்தப்படுத்தாததாகவும் செய்யுங்கள். மிக முக்கியமாக, உங்கள் செயல்களை இவ்வுலகிலும் மறு உலகிலும் ஒன்று போல் வெற்றிக்குரியனவாகத் தேர்ந்து செய்யுங்கள்.

எனவே, வெற்றிக்கான இந்தப் படிகளை உங்கள் மரணத்துக்கு முன்னர் செயல்படுத்த இப்போது உங்கள் முறை!. இவற்றை இன்றே, இப்போதே ஆரம்பித்து வெற்றியாளர்களாகத் திகழுங்கள்.

(நன்றி: www.therevival.co.uk என்ற ஆங்கிலத் தளத்தில் முஸ்லி